Thursday, March 22, 2012

முதல் கலீஃபா அபுபக்கர் (ரலி) வாழ்க்கை வரலாறு part-10

பைஅத் அல்லது உறுதிப்பிரமாணம்

இதனை அடுத்து வந்த (செவ்வாக் கிழமை) தினத்தில், பொதுமக்களிடம் பைஅத் என்ற உறுதிப்பிரமாணம் பெறப்பட்டது. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பள்ளியின் முன்னால் பொதுமக்கள் திரளாகக் குழுமிய பின், அவையினருக்கு மிம்பரில் இருந்து கொண்டு உமர் (ரலி) அவர்கள் உரையாற்ற ஆரம்பித்தார்கள் :


‘நான் எதிர்பார்த்தேன், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இப்பொழுது உயிருடன் இருந்திருந்தால் நமக்கு இதனை தெளிவாக எடுத்துரைத்திருப்பார்கள். ஆனால், இன்று அவர்கள் நம்மிடையே இல்லை, ஆனால் அல்லாஹ் நமக்கு வழிகாட்ட வழங்கிய வேதமான திருக்குர்ஆன் நம்மிடையே இருக்கின்றது, இதனைக் கொண்டு தான் அல்லாஹ் தன் தூதர் (ஸல்) அவர்களை வழி நடத்தினான். அதே வழிமுறைப் பிரகாரம் இப்பொழுது அபுபக்கர் (ரலி) அவர்கள் வந்துள்ளார்கள், அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தோழரும் ஆவார், இன்னும் குகையில் இருந்த இருவரில் ஒருவரும் அவரே, உங்களுடைய விவகாரங்களை சரியான முறையில் கையாள்வதற்கு அவரை விடச் சிறந்த ஒரு மனிதர் சந்தேகமற நம்மில் யாரும் கிடையாது. இப்பொழுது நீங்கள் அவர் முன்பாக வந்து பைஅத் என்ற உறுதிப்பிரமாணத்தை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறி முடித்தார்கள்.

பொதுமக்களிடம் இந்த வேண்டுகோளை விடுத்து விட்டு, அபுபக்கர் (ரலி) அவர்களை நோக்கிய உமர் (ரலி) அவர்கள், அபுபக்கர் (ரலி) அவர்களே, நீங்கள் மிம்பரில் ஏறிக் கொள்ளுங்கள், என்று கூறினார்கள். சற்று தயக்கத்திற்குப் பின்னர், உமர் (ரலி) அவர்களின் வேண்டுகோளை ஏற்று மிம்பரில் ஏறிய அபுபக்கர் (ரலி) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வழக்கமாக அமர்ந்த முதல் படியில் அமராது, அதற்கும் ஒருபடி கீழே உள்ள படியில் உட்கார்ந்தார்கள்.

இப்பொழுது பொதுமக்கள் அனைவரும் ஒவ்வொருவராக வந்து அபுபக்கர் (ரலி) அவர்களின் கரங்களில் உறுதிப்பிரமாணம் வழங்கினார்கள். மக்களில் அனைவரும் உறுதிப்பிரமாணம் வழங்கிய பின்னர், இப்பொழுது பொதுமக்களின் முன்னிலையில் தனது முதல் உரையை ஆற்றுவதற்காக அபுபக்கர் (ரலி) அவர்கள் எழுந்து நின்றார்கள்.

இறைவனைப் புகழ்ந்து விட்டு, என்னுடைய மக்களே..! இறைவன் மீது சத்தியமாக இந்தப் பதவிக்காக இரவிலும் சரி அல்லது பகலிலும் சரி.., நான் என்றுமே குறுக்கு வழியில் செயல்பட்டது கிடையாது, இதனை விரும்பியதும் கிடையாது, இன்னும் இந்தப் பதவியை வேண்டி இறைவனிடம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பிரார்த்தித்ததும் கிடையாது. ஆனால், சில வேண்டத்தகாத விளைவுகள் ஏற்பட்டு விடுமோ என்று தான் நான் அஞ்சுகின்றேன். இப்பொழுது என் மீது நீங்கள் மிகப் பெரிய சுமையைச் சுமத்தியுள்ளீர்கள், இது என்னுடைய சக்திக்கு அப்பாற்பட்டது, இறைவனுடைய உதவியின்றி என்னால் இதனை நிறைவு செய்ய இயலாது. இந்த இக்கட்டான கால கட்டத்தில் என்னை விட சக்தி வாய்ந்ததொரு மனிதரைத் தான் இந்த இடத்தில் நான் பார்க்க விரும்பினேன் என்று கூறினார்கள்.

சந்தேகமில்லாமல், இப்பொழுது நான் உங்களால் தலைமைப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டிருப்பினும், நான் உங்களை விடச் சிறந்தவனல்லன். நான் நேர்வழியில் இருப்பதற்கு எனக்கு நீங்கள் உதவுங்கள், நான் தவறிழைக்கும் பொழுது என்னை நீங்கள் நேர்வழிப்படுத்துங்கள், சீர்திருத்துங்கள். சத்தியம் என்பது அமானிதம் போன்றது, பொய் என்பது அபகீர்த்தியானது.

உங்களில் பலவீனர்கள் என்னிடம் கடுமையைக் காட்டட்டும், அவர்களது உரிமைகள் நிலைநாட்டப்படும் வரை.., இன்னும் உங்களில் வலிமையானவர்கள் என் மீது இரக்கம் காட்டட்டும்.

அல்லாஹ்வின் பாதையில் போராடுவதனின்றும் விலகி இருக்க எந்த சமுதாயத்தினாலும், ஆனால் படுபாதகக் கொலையில் ஈடுபடுவதைத் தவிர்த்து, அல்லாஹ்வின் பாதையில் போராடுவதனைக் கை விடுவதற்கு எந்த சமுதாயத்திற்கும் அனுமதி கிடையாது. எவரொருவர் மானக் கேடான விஷயத்தை செய்தாலும், அவரை சத்தியத்தின் பால் கொண்டு வரப்பட்டு இறைவனின் தண்டனையை அவர் மீது நிறைவேற்றி வைக்கப்படும்.

நான் அல்லாஹ்வுக்கும் அவனது தூதர் (ஸல்) அவர்களுக்கும் கட்டுப்படும் வரைக்கும் எனக்கும் கட்டுப்படுங்கள். எப்பொழுது அவர்களுக்குக் கட்டுப்படுவதனின்றும் நான் தவிர்ந்து விடுகின்றேனோ அப்பொழுதிலிருந்து நீங்களும் எனக்குக் கட்டுப்பட வேண்டாம்.

இப்பொழுது தொழுகைக்கான நேரம் வந்து விட்டது. அல்லாஹ் நம்மீது கருணை புரிவானாக..!

இந்த சத்தியப் பிரமாணத்திற்குப் பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கலீபா என்ற பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். ஒருமுறை அல்லாஹ்வின் கலீஃபா என்று அபுபக்கர் (ரலி) அவர்களை அழைத்த பொழுது, அவ்வாறு என்னை அழைக்க வேண்டாம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கலீஃபா என்றழைப்பதையே நான் போதுமாக்கிக் கொள்ள விரும்புகின்றேன் என்று கூறினார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்ததன் பின் அரசு நிர்வாகம் சரியான முறையில் இயங்குவதற்கு முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிர்வாகம் ஒன்று தேவை என்பது அவசியமாக இருந்தது, இப்பொழுது அது அபுபக்கர் (ரலி) அவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதன் காரணமாக நிறைவேறியது.

உஸாமா (ரலி) தலைமையில் படையெடுப்பு

ஹிஜ்ரி 8 ம் ஆண்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உயிருடன் இருந்த அந்த காலகட்டத்தில், முஸ்லிம்களின் மீது தாக்குதல் நடத்தத் தயாராகி வந்த ரோமப்படைகளை, முஅத்தா என்ற இடத்தில் வைத்து எதிர்ப்பதற்காக உஸாமா (ரலி) அவர்களின் தலைமையில் ஒரு படையைத் தயார் செய்தார்கள். இதில் மதீனாவைச் சேர்ந்த 700 இளைஞர்கள் இருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சுகவீனம் அடைந்ததன் காரணமாக, இந்தப் படை மதீனாவை விட்டும் இன்னும் கிளம்பாத நிலையில் இருந்தது.

இப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மரணித்ததன் பின்பு, அபுபக்கர் (ரலி) அவர்களும் ஆட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்பு, அபுபக்கர் (ரலி) அவர்கள் ஆட்சித் தலைவராக இருந்து, முதன் முதல் உத்தரவாக, உஸாமா (ரலி) அவர்களுடன் ரோமர்களை எதிர்ப்பதற்காக தயார் செய்யப்பட்ட படை கிளம்பத் தயாராகட்டும், அந்தப் படையுடன் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்ட எவரும் மதீனாவில் தங்கக் கூடாது, அந்தப் படையுடன் செல்ல அனுமதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஜுர்ஃப் என்ற இடத்தில் போய் படையுடன் சேர்ந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்கள்.

இறைத்தூதர் (ஸல்) இறந்ததன் பின்பு, மதீனாவின் சமூகச் சமநிலை பாதிக்கப்பட்டது, அமைதி அழிந்து காணப்பட்டது, புதிதாக பொய்த் தூதர்கள் பலர் தோன்ற ஆரம்பித்தார்கள். இதனை சாக்காக வைத்துக் கொண்டு, கிறிஸ்தவர்களும், யூதர்களும் திட்டமிட்ட முறையில் குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். இந்த நிலையில், அபூ மஸ்ஊத் (ரலி) போன்ற முன்னணி நபித்தோழர்கள், உஸாமா (ரலி) அவர்களின் தலைமையில் இப்பொழுது ஒரு படை வெளிக்கிளம்பிச் செல்வது அவ்வளவு உகந்ததல்ல. கடுங்குளிர் நேரத்தில், ஆட்டிடயனைத் தொலைத்த ஆட்டு மந்தை போல, இப்பொழுது முஸ்லிம்களின் நிலை இருக்கின்றது. சுற்றிலும் அந்த ஆட்டைக் காவு கொள்ளக் காத்திருக்கும் ஓநாய் கூட்டத்திற்கு மத்தியில் முஸ்லிம்கள் அகப்பட்டு தத்தளித்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்தப் படையெடுப்பு சரிதானா? என்ற கேள்வியை எழுப்பினார்கள்.

ஆனால்; அபுபக்கர் (ரலி) அவர்களோ, இது என்னுடைய உத்தரவல்ல, இது இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உத்தரவு. என்னுடைய உயிர் எவன் கை வசம் இருக்கின்றதோ, அவன் மீது சத்தியமாக..! இந்த உத்தரவில் நான் எந்த மாற்றத்தையும் செய்ய மாட்டேன். படை புறப்படுவது என்பதுஉறுதியானது. இந்த உங்களது கருத்தில் நான் உடன்படுவதை விட, ஒரு ஓநாய் என்னைக் கவர்ந்து சென்று விடுவதையே நான் பெரிதும் விரும்புகின்றேன், நான் இந்த மதீனாவில் தன்னங்தனியாக தனித்து விடப்படினும் சரியே..! என்று கூறி முடித்தார்கள்.

சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததன் பின், படையுடன் செல்ல நியமிக்கப்பட்டவர்களை உடன் கிளம்பத் தயாராகும்படி அபுபக்கர் (ரலி) அவர்கள் உத்தரவிட்டார்கள். அனைத்துப் படையினரும் இப்பொழுது ஜுர்ஃப் என்ற இடத்தில் கூடி விட்டனர். படையினர் அங்கு முகாமிட்டுக் கொண்டிருந்த அந்த நேரத்தில், உமர் (ரலி) அவர்கள் மூலமாக ஒரு செய்தியை உஸாமா (ரலி) அவர்கள் கலீஃபா அபுபக்கர் (ரலி) அவர்களுக்கு அனுப்பி வைக்கின்றார்கள்.

கலீஃபா அவர்களே..!

நமது படை கிளம்பியவுடன், இந்த குழப்பக்காரர்கள் கலீஃபாவையும், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இடத்தையும், இன்னும் பொதுவாக மக்களையும் சூழ்ந்து தாக்கத் துவங்கி விடுவார்கள். எனவே, நீங்கள் அனுமதித்தால் நான் மதீனாவில் இருக்கவே விரும்புகின்றேன் என்ற செய்தியை அனுப்பி வைத்தார்கள்.

இந்த நேரத்தில் அங்கு கூடியிருந்த அன்ஸார்கள் இந்த ஆலோசனையை உமர் (ரலி) அவர்களின் முன்பாக வைத்தார்கள். உஸாமா (ரலி) அவர்களுக்குப் பதிலாக, அவரை விட வயதில் மூத்த அனுபவமிக்க ஒருவரை தலைமைப் பொறுப்பில் நியமிக்கலாமே என்று ஆலோசனை கூறி, இதனை அபுபக்கர் (ரலி) அவர்களிடம் தெரிவிக்குமாறு கூறினார்கள்.

உஸாமா (ரலி) அவர்களின் வேண்டுகோளுக்கு பதிலளித்த கலீஃபா அவர்கள், அவ்வாறெல்லாம் தேவையில்லை, படை புறப்படுவது என்பது நிச்சயமானது என்று கூறினார்கள்.

அதன் பின் உமர் (ரலி) அவர்கள் அன்ஸார்கள் கூறிய ஆலோசனையை கலீஃபா அவர்களிடம் முன் வைத்தபொழுது, இதனைக் கேட்ட கலீஃபா அபுபக்கர் (ரலி) அவர்கள் சினந்தவர்களாக..,

உங்கள் மீது அழிவு உண்டாவாதாக..! இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நியமித்த ஒருவரை என்னைக் கொண்டு நீக்க முனைகின்றீர்களே..!? என்று கேட்டு விட்டு, கலீஃபா அபுபக்கர் (ரலி) அவர்கள் படையினரை வழியனுப்பி வைப்பதற்காக ஜுர்ஃப் என்ற இடத்திற்கு விரைந்தார்கள்.

இந்த நேரத்தில், படைக்குத் தளபதியாக நியமிக்கப்பட்ட உஸாமா (ரலி) அவர்கள் குதிரையில் அமர்ந்து வருகின்றார்கள். கலீஃபா அபுபக்கர் (ரலி) அவர்கள் நடந்துவர, அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் தனது குதிரையின் மீது அமராமல் அதனை நடத்திக் கூட்டி வருகின்றார்கள்.

இப்பொழுது, உஸாமா (ரலி) அவர்கள், உங்களது குதிரையை நீங்கள் ஓட்டி வாருங்கள் அல்லது என்னை நடந்து வர அனுமதியுங்கள் என்று கூறினார்கள்.

அபுபக்கர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

நான் குதிரையில் ஏறியும் வர முடியாது, உங்களை இறங்கி நடக்கவும் அனுமதிக்க முடியாது என்று கூறி விட்டு, அல்லாஹ்வின் பாதையில் போரடக் கிளம்பியவரின் பாதங்களில் படக் கூடிய தூசி பட்டதனால் என்னுடைய அந்தஸ்து என்ன குறைந்தா போய்விடும்?

அல்லாஹ்வின் பாதையில் சேவை செய்யக்கூடிய ஒருவரின் அந்தஸ்தை 700 மடங்கை உயர்த்துகின்றான், இன்னும் 700 பாவங்களை போக்குகின்றான், 700 நன்மைகளை அவன் கணக்கில் எழுதி விடுகின்றான்.

பின்பு, படையினரின் பக்கம் திரும்பிய அபுபக்கர் (ரலி) அவர்கள், வீரர்களே..! உங்களுக்கு நான் பத்து கட்டளைகளை இடுகின்றேன். அவற்றை மனதினுள் பதித்துக் கொள்ளுங்கள்..!

மோசடியில் ஈடுபடாதீர்கள், உங்களில் தலைவருக்குக் கட்டுப்பட மறுக்காதீர்கள், உடலை அங்கவீனப்படுத்தாதீர்கள். வயதானவர்களையும், பெண்களையும் அல்லது குழந்தைகளையும் கொலை செய்யாதீர்கள். ஈச்ச மரங்களை வெட்டவோ அல்லது எரிக்கவோ அல்லது கனிதரக் கூடிய மரங்களை வெட்டவோ செய்யாதீர்கள். உணவுக்கா அன்றி ஆடு, மாடு அல்லது ஒட்டகங்களை வெட்டிக் கொல்லாதீர்கள். மடங்களில் தங்கி தங்களது இறுதிக்காலத்தைக் கழிக்கக்கூடிய மக்களை ஒன்றும் செய்யாதீர்கள், அவர்களை அவர்களது வழியிலேயே விட்டு விடுங்கள். நீங்கள் செல்லும் பாதைகளில் விதவிதமான பாத்திரங்களில் உணவு கொண்டு வரக் கூடிய மக்களைக் காண்பீர்கள். அவைகளை நீங்கள் உண்ண ஆரம்பிக்கும் பொழுது, இறைவனது திருப்பெயரை மொழிந்து கொள்ளுங்கள். இன்னும் உச்சந்தலையில் சிரைத்து, அதனைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் முடிகளை வளர விட்டு சடை போலத் தொங்க விட்டுக் கொண்டிருக்கும் மனிதர்களைப் பார்ப்பீர்கள். அவர்களை உங்களது வாளால் தாக்குங்கள். அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு முன்னேறுங்கள். எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து அல்லாஹ் உங்களைப் பாதுகாப்பானாக இன்னும் கொடிய நோயிலிருந்தும் உங்களைப் பாதுகாப்பானாக..! என்று கூறி முடித்தார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்து 19 நாட்கள் கழித்து, ரபீஉல் ஆகிர் மாதம் இறுதியில் படை கிளம்ப ஆரம்பித்தது. இன்னும் இந்தப் படை கிளம்பியதன் மூலம், அரேபியாவைச் சுற்றிலும் உள்ள மக்களின் மனதில் முஸ்லிம்களைப் பற்றி அச்சத்தை ஊட்டியது. அதாவது, மதீனாவில் மிகவும் குழப்பமான நிலை நிலவும் இந்தச் சூழ்நிலையில், படை ஒன்று வெளிக்கிளம்புவது என்பது இயலாத காரியம். அப்படி கிளம்புகின்றதென்றால், முஸ்லிம்கள் மிகவும் வலிமை மிக்க நிலையில் இருந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது அர்த்தமாகும் என்று அவர்கள் மதிப்பீடு செய்து கொண்டார்கள்.

0 comments:

Post a Comment