Thursday, March 22, 2012

முதல் கலீஃபா அபுபக்கர் (ரலி) வாழ்க்கை வரலாறு part-09

தேர்தல்

இப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பள்ளியில் அன்ஸார்கள் ஒன்று கூடி இருந்து கொண்டிருந்த பொழுது, அபுபக்கர் (ரலி) அவர்களிடம் ஒருவர் வந்து, அன்ஸார்கள் இப்பொழுது சகீஃபா பனீ சஃதா வில் திரண்டிருக்கின்றார்கள், அவர்கள் அங்கு அடுத்த கலீஃபா யார் என்பது பற்றி பேசிக் கொண்டிருக்கின்றார்கள், நிலைமை முற்றி அதன் பின் நடவடிக்கை
எடுப்பதற்குப் பதிலாக, இப்பொழுதே சென்று அங்குள்ள முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்குண்டான நடவடிக்கையை எடுங்கள் என்று அந்த மனிதர் கூறினார்.

நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து கொண்ட உமர் (ரலி) அவர்கள், அபுபக்கர் அவர்களே..! நாம் இப்பொழுதே சென்று நமது சகோதரர்களான அன்ஸார்களைச் சந்திப்போம் என்று ஆலோசனை கூறினார்கள். அதன்படியே, இருவரும் அந்த இடத்திற்கு விரைந்தார்கள். செல்லும் வழியில் அபூ உபைதா (ரலி) அவர்களும் இவர்களுடன் இணைந்து கொண்டார்கள். இதற்கிடையில் இரண்டு அன்ஸார்கள் இவர்களை வழியில் சந்தித்தார்கள், அவர்கள் இவர்களை நோக்கி நீங்கள் எங்கு செல்கின்றீர்கள் எனக் கேட்டார்கள், அதற்கு உமர் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். அப்பொழுது அவர்கள் நீங்கள் அங்கு போவதற்குப் பதிலாக திரும்பி விடுவதே மேல், அன்ஸாரிகளாகிய அவர்கள் தங்களது பிரச்னைகளைத் தாங்களே தீர்த்துக் கொள்ளட்டும் என்று ஆலோசனை கூறிய பொழுது, இல்லை, சத்தியமாக நாங்கள் அந்த இடத்திற்குச் சென்றே தீருவோம் என்று உமர் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.

இனி பனீ சகீஃபா வில் என்ன நடக்கின்றது என்பதைப் பற்றிப் பார்ப்போம். கூட்டம் திரண்டிருந்த அந்த இடத்தில், சஅத் பின் உபைதா அவர்கள் தனது ஆரம்ப உரையை நிகழ்த்த ஆரம்பித்தார்கள்.

இறைவனைப் புகழ்ந்தவர்களாக, ஓ..! அன்ஸாரிகளே..! இஸ்லாத்தைப் பொறுத்தவரை நீங்கள் அனைத்து விஷயங்களில் முதன்மை பெற்றவர்களாக இருக்கின்றீர்கள், அரேபியாவில் இருக்கக் கூடிய மற்ற அனைத்து குலங்களை விடவும் இஸ்லாத்தின் மேன்மையை உயர்த்திய பெருமை பெற்றவர்களாகவும் இருக்கின்றீர்கள். இன்னும் முஹம்மது (ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் தூதுத்துவப் பிரச்சாரத்தை அந்த மக்கத்துக் குறைஷிகளிடம் பத்து வருடங்கள் எடுத்து வைத்த போதும், ஒரு சிலரே இந்த சத்தியத்தை ஏற்க முன்வந்தார்கள், இன்னும் பலர் தங்களது பழைய மதத்திலேயே தொடர்ந்து இருந்து வந்த நிலையில், இன்னும் சிலர் இஸ்லாத்தைத் தழுவினாலும் இஸ்லாம் வலுவானதொரு நிலைக்கு வரவில்லை. ஏன் இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் பாதுகாக்கும் வலிமையைக் கூட பெற்றிருக்கவில்லை, இன்னும் இஸ்லாத்தின் பெருமைகளை உயர்த்த இயலவில்லை, இன்னும் அடக்குமுறையாளர்களின் அடக்குமுறைகளை அடக்கி ஒடுக்கவும் இயலாத நிலையிலேயே இருந்த நிலையில், அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர் (ஸல்) அவர்கள் மீதும் நம்பிக்கை கொள்ள வைத்ததன் மூலம், அல்லாஹ் உங்களைக் கொண்டு இந்த மார்க்கத்தின் உன்னதத்தை மற்றவர்களுக்கு விளங்கப்படுத்தினான், மேன்மைப்படுத்தினான். இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களையும், அவர்களது தோழர்களையும் பாதுகாக்கும் பொறுப்பையும் வழங்கியதோடு, இஸ்லாத்தின் கண்ணியத்தை மேன்மையுறச் செய்யும் பொறுப்பையும் உங்களிடம் வழங்கினான், இன்னும் சத்திய மார்க்கத்திற்கு எதிராக போர் தொடுத்த எதிரிகளுக்கு பாடம் கற்பிக்கும் வீரத்தையும் உங்களிடமிருந்து எழும்பச் செய்தான். உங்களது அந்த வீரத்தின் தாக்கமானது எதிரிகளுக்கு கடும் அச்சத்தை ஊட்டியது, அவர்கள் உங்களைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அல்லது வெளிதேசத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களை நீங்கள் இஸ்லாத்தின் எதிரிகளாகக் கணித்தே எதிர்த்து வந்த, போர் செய்த பெருமைக்குரியவர்களாக இருந்தீர்கள். இதன் மூலம் அரேபியாவானது விரும்பியோ அல்லது விரும்பாமலோ இறைவனின் கட்டளைக்கு சிரம் தாழ்த்தியது. உங்களுடைய வாளின் வலிமையானது அவர்களை மண்டியிட வைத்தது, இதன் மூலம் முழு அரேபியாவும் உங்களுக்கு கட்டுப்பட்டு வரக் கூடிய நிலைமையும் உருவாகியது. இப்பொழுது இறைவனின் கட்டளைப் பிரகாரம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மரணமடைந்து விட்டார்கள், எதில் நீங்கள் இப்பொழுது விவாதம் செய்து கொண்டிருக்கின்றீர்களோ (அதாவது கிலாபத்தைப் பற்றி) அதில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உங்களைப் பொறுத்தவரை முழு திருப்திப்பட்டவர்களாகத் தான் இருந்தார்கள். இது உங்களுடைய உரிமையும் கூட, மற்றவர்களைப் போல அல்ல என்று கூறி விட்டு உரையை முடித்தார்கள்.

உபைதா அவர்களின் உரையைச் செவிமடுத்த மக்கள், நீங்கள் எங்களது தலைவராகவும் இருக்கின்றீர்கள், இறைநம்பிக்கை மிக்கவராகவும் இருக்கின்றீர்கள், உங்களது அறிவுரையை நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம், அதன்படிச் செயல்படவும் தயாராக இருக்கின்றோம் என்று கூறினார்கள். இந்த உரைக்குப் பின் மீண்டும் ஆலோசனை துவங்கிய பொழுது, ஒருவர் கேட்டார்,

சத்திய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டவர்களில் முதன்மையானவர்களாகவும், இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களாகவும் இருக்கின்ற தகுதியை வைத்து, அவர்கள் அதாவது முஹாஜிர்கள் தலைமைப் பொறுப்பு தங்களுக்குத் தான் வர வேண்டும் என்று விரும்பினால், அதற்கு என்ன பதிலை வைத்துள்ளீர்கள் என்ற கேள்வியைக் கேட்டார்.

அங்கிருந்த ஒரு அன்ஸார் கூறினார், நம்மிடையே ஒருவர் அமீராக இருப்பது போல, அவர்களுக்கு ஒருவர் அமீராக இருப்பார், எந்த நிபந்தனைகளையும் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் மேலும் கூறினார்.

அன்ஸார்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் நிலையில் அபுபக்கர் (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும், உபைதா (ரலி) அவர்களும் அந்த அவைக்குள் நுழைகின்றார்கள். அன்ஸார்கள் தங்களுக்குள் மிகப் பெரிய விவாதங்களை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், ஒருவர் மட்டும் தன்னைத் துணியால் போர்த்திக் கொண்டவராக படுத்திருந்தார். யார் அவர் என்று உமர் (ரலி) அவர்கள் விசாரித்த பொழுது, அவர் தான் சஅத் பின் உபைதா (ரலி) அவர்கள் என்று பதில் கொடுக்கப்பட்டது. அவர் ஏன் இவ்வாறு படுத்திருக்கின்றார்? என்று கேட்கப்பட்ட போது, அவர் சுகவீனமாக இருக்கின்றார் என்று கூறப்பட்டது.

இதனை அடுத்து வந்த அந்த மூவரும் அவையில் உட்கார்ந்த பிறகு, அன்ஸார்களில் ஒருவர் எழுந்து கலீபாவாக தேர்ந்தெடுக்கப்படுவதில் அன்ஸார்களின் முன்னுரிமை என்னவென்பதைப் பற்றிப் பேசினார். அவருக்கு அடுத்துப் பேசிய பலரும் இதே தொணியில் தான் பேசி விட்டுச் சென்றார்கள்.

இப்பொழுது உமர் (ரலி) அவர்கள் தான் பேச விரும்புவதற்கு எழும்ப முயன்ற பொழுது, அபுபக்கர் (ரலி) அவர்கள் அவரைத் தடுத்து விட்டு, தானே பேசப் போவதாகக் கூறி எழுந்தார்கள்.

இறைவனைப் புகழ்ந்து விட்டு, அல்லாஹ் முஹம்மது (ஸல்) அவர்களைப் படைத்து, அவரது தோழர்களான நமக்கு வழி காட்ட அனுப்பி வைத்தான், அதன் மூலம் அல்லாஹ்வின் அடிமைகள் அவனை வணங்க வேண்டும் என்பதற்காகவும், இன்னும் தவ்ஹீத் என்று சொல்லக் கூடிய ஏகத்துவம் என்ற தத்துவத்தை ஏற்றுப் பின்பற்றுவார்கள் என்பதற்காகவும் தன் தூதரை நம்மிடையே அனுப்பி வைத்தான்.

இஸ்லாத்தின் வருகைக்கு முன்னர் மக்கள் பல நூறு தெய்வங்களை வணங்கி வந்தார்கள், அந்தத் தெய்வங்களிடம் தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளப் பிரார்த்தித்தார்கள், இன்னும் அந்த தெய்வங்கள் யாவும் கல்லிலும், மரத்திலும் வடிக்கப்பட்டவையாக இருந்த நிலையிலும், அறிந்தே இந்தத் தவறைச் செய்து வந்தார்கள். தனது இந்த பேச்சிற்கு ஆதாரமாகக் கீழ்க்கண்ட இறைவசனத்தையும் அபுபக்கர் (ரலி) அவர்கள் அந்த அவையினருக்கு கோடிட்டுக் காட்டினார்கள்.

தங்களுக்கு (யாதொரு) நன்மையோ தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றை (முஷ்ரிக்குகள்) வணங்குகிறார்கள்; இன்னும் அவர்கள், ''இவை எங்களுக்கு அல்லாஹ்விடம் மன்றாட்டம் செய்பவை"" என்றும் கூறுகிறார்கள்; (10:18)

''அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவே யன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை"" (என்கின்றனர்). (39:3)

இந்தப் பூமிக்கு இஸ்லாம் வந்துதித்த பின்னர், சத்திய மார்க்கத்தை இந்த அரபுக்கள் ஏற்றுப் பின்பற்றுவதில் அதிக அலட்சியம் காட்டினர், தங்களது முன்னோர்களது மார்க்கத்தை விட்டு விட்டு வர மறுத்தனர். இந்த நிலையில் தான், முஹாஜிர்களை அல்லாஹ் அவர்களிலிருந்தே உருவாக்கினான், அவர்களின் மூலம் தனது தூதரை இறைத்தூதரென்று ஏற்றுக் கொள்ளச் செய்தான். இறைநம்பிக்கை கொள்ளச் செய்தான், அவரது சொந்த உடன்பிறப்புக்களே அவரை பொய்யரென்று தூற்றிய பொழுதும், அவருக்கு சொல்லொண்ணா துன்பங்களைக் கொடுத்த பொழுதும், அதில் பங்கு பெறக் கூடியவர்களாக இந்த ஆரம்பகால முஸ்லிம்களை அல்லாஹ் தனது தூதருக்கு வழங்கினான்.

நாம் சிறு கூட்டமாக இருக்கின்றோம் என்பதனாலும், இன்னும் நமது எதிரிகள் நம்மை விட அதிகம் இருக்கின்றார்கள் என்பதனாலும் கூட அவர்களது இறைநம்பிக்கையைத் தளவுறச் செய்ய முடியவில்லை, அவர்களது உளவலிமையை அசைத்து விட முடியாத அளவுக்கு அவர்களிடம் உறுதிப்பாடு இருந்தது என்பது, அந்த ஆரம்பகால முஸ்லிம்களுக்கிருந்த மிகப் பெரும் அருட்கொடைகளாகும். இந்த மக்கள் தான் இறைநம்பிக்கையில் முந்திக் கொண்ட மக்களாவார்கள், இவர்கள் இந்தப் பூமியில் இறைவனை வணங்க ஆட்களே இல்லாத அந்த நிலையில், இறைநம்பிக்கையில் முந்திக் கொண்டு இறைநம்பிக்கை கொண்டார்கள், அல்லாஹ் ஒருவனையே தங்களது ஏக இறைவனாகவும், அவனது திருத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை, தாங்கள் ஏற்றுப் பின்பற்றுகின்ற தூதராகவும் ஏற்றுக் கொண்டார்கள். இதுவல்லாமல், அவர்கள் அந்தத் தூதருக்குத் தோழராகவும், இன்னும் உறவினர்களாகவும் இருந்தார்கள். இந்த வகையில், இந்த கலீபாவுக்கான முன்னுரிமையில் அவர்களைத் தவிர வேறு எவரும் உரிமை கொண்டாட முடியாத அளவுக்கு அவர்களின் மிகவும் உறுதியான ஆதாரங்கள் இருக்கின்றன. இன்னும் தவறிழைப்பவர்களைத் தவிர வேறு யாரும் இந்த விஷயத்தில் அவர்களுடன் போட்டி போட மாட்டார்கள். அவர்களுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ள மாட்டார்கள் என்றும் தனது உரையில் கூறினார், அபுபக்கர் (ரலி) அவர்கள்.

இன்னும் என்னுடைய அன்ஸாரித் தோழர்களே...!

இந்த இஸ்லாமிய மார்க்கத்தில் உங்களது உயர் தரத்தை யாரும் மறுத்து விட முடியாது அல்லது இஸ்லாத்தின் மீது உங்களுக்கு உள்ள பற்றை யாரும் சந்தேகித்து விட முடியாது. உங்களை அல்லாஹ் இந்த இஸ்லாமிய மார்க்கத்திற்கும் இன்னும் தனது தூதர் (ஸல்) அவர்களுக்கும் உதவக் கூடிய அன்ஸார்களாகத் தேர்ந்தெடுத்திருக்கின்றான். இன்னும் மக்காவிலிருந்து அவரை வெளியேற்றி உங்கள் பால் அவரை வரச் செய்தான், அதனால் அநேகமான ஆண்களும் பெண்களுமாக இஸ்லாத்திற்குள் நீங்கள் நுழைந்தீர்கள் அந்த வகையில் நீங்கள், மற்றவர்களைக் காட்டிலும் அதிகமான எண்ணிக்கையில் இறைநம்பிக்கை கொண்டவர்களாக இருக்கின்றீர்கள். இந்த போதிலும், நீங்கள் அந்த ஆரம்பகால முஸ்லிம்களுக்குப் பின்னால் தான் நிற்கக் கூடிய நிலையில் இருக்கின்றீர்கள். எனவே, முஹாஜிர்களாகிய நாங்கள் தலைமைப் பொறுப்பிலும், அதாவது அமீராகவும், இன்னும் அந்த அமீரகத்திற்கு உதவக் கூடிய அமைச்சர்களாகவும் இருப்பதே நீதமான தீர்ப்பாகும் என்று நான் கருதுகின்றேன் என்று கூறினார்கள்.

இன்னும் சில அறிவிப்புகளில், அபுபக்கர் (ரலி) அவர்கள் தான் இரு நபர்களைச் சுட்டிக்காட்ட இருப்பதாகவும், அந்த இருவரில் ஒருவரை நீங்கள் தேர்வு செய்தால் அதனை நான் ஆமோதிக்கின்றேன் என்று கூறியதாகவும் வருகின்றது. அவ்வாறு அவர்கள், உமர் (ரலி) அவர்களையும், அபூ உபைதா (ரலி) அவர்களையும் சுட்டிக்காட்டியதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இந்த வாசகத்துடன் தனது உரையை அபுபக்கர் (ரலி) அவர்கள் முடித்துக் கொண்டார்கள் என்றும் குறிப்பிடப்படுகின்றது.

அபுபக்கர் (ரலி) அவர்கள் தனது கருத்தை வலியுறுத்திப் பேசியதன் பின்னரும், சில அன்ஸார்கள் எழுத்திருந்து தங்களுக்கிருக்கின்ற முன்னுரிமைகளை எடுத்துரைத்து, கலீபா என்பவர் எங்களிலிருந்தே வர வேண்டும் என்ற கருத்தையே வலியுறுத்திப் பேசி வந்தனர். அப்பொழுது அபூ உபைதா (ரலி) அவர்கள் எழுந்திருந்தார்கள். ஓ அன்ஸார்களே..! என்னருமைத் தோழர்களே..!

நீங்கள் உதவி மற்றும் ஒத்தாசை செய்யக் கூடியவர்களில் முந்திக் கொண்டவர்கள் என்பதற்காக, இந்த கலீபா தேர்வு விஷயத்திலும் தங்களுக்கு முன்னுரிமை வேண்டும் என்று கோருவது சரியல்ல, அதனை நீங்கள் தவிர்த்து கொள்ள வேண்டும். இந்த வகையில், அன்ஸாரித் தோழர்களில் மூத்தவர்களான ஜைத் பின் தாபித் மற்றும் பஷீர் பின் சஅத் (ரலி) ஆகிய இருவரும் எழுந்திருந்து தங்களது அன்ஸாரித் தோழர்களுக்கு, அபுபக்கர் (ரலி) அவர்கள் மற்றும் அபூ உபைதா (ரலி) ஆகிய இருவரின் பேச்சில் உள்ள நியாயத்தை விளக்கிக் கூறினார்கள்.

அதனையிட்டு, ஜைத் பின் தாபித் (ரலி) அவர்கள் கூறினார்கள் : இறைத்தூதர் (ஸல்) அவர்களும் ஒரு முஹாஜிர், எனவே, அந்த முஹாஜிர்களில் இருந்தே தான் நாம் நமது தலைவரை (இமாமை) த் தேர்ந்தெடுக்க வேண்டும். நாம் அன்ஸார்கள், அதாவது உதவியாளர்கள் - நாம் அவர்களுக்கு உதவுவதில் தான் நமது பங்களிப்பு உள்ளது என்று விளக்கினார்கள். இவரது இந்தக் கூற்றை ஆதரித்து பஷீர் (ரலி) அவர்கள் உரையாற்றினார்கள், ஓ .. அன்ஸார்களே..! என்னருமைத் தோழர்களே..! நாம் அந்த பல தெய்வ வணக்கக் காரர்களை எதிர்த்து பல போர்களில் முன்னணி வகித்துள்ளோம் தான், ஆனால் அந்த அற்பணிப்புகள் எல்லாம் நம்மைப் படைத்த அந்த வல்லோனின் மார்க்கத்தை மேலோங்கச் செய்தவர்கள் என்ற கண்ணியத்தைப் பெற்று, அவனது திருப்பொருத்தத்தைப் பெற்றுக் கொள்ளத் தான். இன்னும் அதன் மூலம் அல்லாஹ்வுக்கு அடிபணிந்தோம், அவனது திருத்தூதர் (ஸல்) அவர்களுக்குக் கீழ்படிந்தோம், இன்னும் குறிப்பாக நமது மறுமைப் பயணத்திற்காகவே உழைத்தோம், பாடுபட்டோம். நாம் பிறரது உரிமைகளைப் பறிக்கும் நோக்கத்தில் இத்தகைய அற்பணிப்புகளில் ஈடுபடவும் இல்லை, இன்னும் இந்த உலக ஆதாயத்திற்காகவும் நாம் பாடுபடவும் இல்லை. அல்லாஹ் தான் நமது அற்பணிப்புகளுக்கு கூலி வழங்கக் கூடியவன்.

இன்னும் ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் குறைஷிக் குலத்திலிருந்து வந்தவர்கள், அதனால் அவர்களும் கூட தாங்கள் தான் கலீபாக வர வேண்டும் என்ற வாதத்தை வலியுறுத்திக் கூற முடியும், இன்னும் அவர்கள் அதற்குத் தகுதியானவர்களும் கூட, அவர்கள் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விட்டுச் சென்ற இடத்தினை நிரப்பி, தலைமைப் பொறுப்புக்கு வரக் கூடியவர்களாகவும் இருக்கின்றார்கள். இன்னும் இந்த விஷயத்தில் என்னை ஒரு விதண்டாவாதக் காரனமாக அல்லாஹ் என்னை ஆக்காதிருக்கவே நாம் விரும்புகின்றேன். அல்லாஹ்வுக்காக..! அவர்களுடன் எந்த விதண்டாவாதங்களும், தர்க்கமும் வேண்டாம், என்றே நான் விரும்புகின்றேன் என்று பேசி முடித்தார்கள்.

இப்பொழுது அபுபக்கர் (ரலி) அவர்கள் எழுந்து, தான் ஏற்கனவே முன் வைத்த கோரிக்கை முன்னிலைப்படுத்தி, உங்கள் முன் இருக்கின்ற இந்த இருவரில் ஒருவரைத் தேர்வு செய்யுங்கள் என்று கூறினார்கள்.

அபுபக்கர் (ரலி) அவர்களே..! இந்த விஷயத்தில் உங்களை விட நாங்கள் எந்த விதத்திலும் சிறந்தவர்கள் அல்ல, எங்களைக் காட்டிலும் உங்களுக்கே அதிகத் தகுதிகள் இருக்கின்றன, எங்களை வேட்பாளர்களாக முன்னிறுத்த நாங்கள் சம்மதிக்க மாட்டோம் என்று, இருவரும் ஒருசேரக் கூறினார்கள்.

சந்தேகமில்லாமல், முஹாஜிர்களில் நீங்கள் தலைசிறந்தவர்கள், அந்தக் குகையில் இருந்த இருவரில் ஒருவராகவும் இருந்தீர்கள், இன்னும் உங்களைத் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் இமாமாக நியமனம் செய்தார்கள், இன்னும் தொழுகை என்பது நமது மார்க்கத்தின் தலை போன்றதாக இருக்கின்றது.

இன்னும் உங்களைக் காட்டிலும், இதனை விடச் சிறந்த தகுதியினைப் பெற்ற ஒருவர் நம்மிடையே யார் தான் இருக்கின்றார்கள்?

உங்களது கைகளை நீட்டுங்கள், உங்களை எங்களது தலைவராக ஏற்றுக் கொண்டு உங்களது கரங்களில் நாங்கள் சத்தியப் பிரமாணம் செய்கின்றோம் என்று கூறினார்கள்.

உமர் (ரலி) அவர்களும், உபைதா (ரலி) அவர்களும் பேசி முடித்தவுடன், யாரையும் எதிர்பார்க்கமால் முன் வந்த பஷீர் பின் சஅத் அல் அன்ஸாரி (ரலி) என்ற நபித்தோழர், அபுபக்கர் (ரலி) அவர்களின் கரங்களில் பைஅத் என்ற உறுதிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். அவரது உறுதிப்பிரமாணத்திற்குப் பின் உமர் (ரலி) அவர்களும், அவருக்கும் பின் அபூ உபைதா (ரலி) அவர்களும் உறுதிப்பிரமாணம் எடுத்துக் கொள்ள, பின் அங்கிருந்த ஒவ்வொருவராக வந்த உறுதிப்பிரமாணம் எடுத்துக் கொள்ள ஆரம்பித்தார்கள், அப்பொழுது அங்கே சுகவீனத்துடன் படுத்துக் கொண்டிருந்த சஅத் பின் உபைதா (ரலி) அவர்கள் எங்கே மக்களின் கால்களில் மீதிபட்டு, உருக்குலைந்து போய்விடுவார்களோ என்று அச்சப்படும் அளவுக்கு மக்கள் அங்கே திரண்டு முண்டியடித்துக் கொண்டு வந்து உறுதிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்கள். இன்னும் இந்தச் செய்தி மதீனா நகரெங்கும் எதிரொலிக்க மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து குழுமினர். இதுவே, வரலாற்றில் தனிப்பட்ட நபரிடம் எடுத்துக் கொள்ளப்பட்ட உறுதிப்பிரமாணம் என்றழைக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment