Thursday, March 22, 2012

முதல் கலீஃபா அபுபக்கர் (ரலி) வாழ்க்கை வரலாறு part-11

பொய்த் தூதர்கள்

மக்காவின் வெற்றிக்குப் பின்பு, இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்காக பல்வேறு குலத்தவர்கள் வந்தார்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். இவ்வாறு இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைக்கப்பட்ட தூதர்கள் மூலம், அந்தப் பிரதேசத்து மக்கள் இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொண்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். அவ்வாறே முஸைலமா வாழ்ந்த பகுதியான எமன் மக்களும்
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். ஹிஜ்ரி 10 ஆம் ஆண்டு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அலீ (ரலி) அவர்களை எமனுக்கு அனுப்பி வைத்து, அங்குள்ள மக்களுக்கு இஸ்லாத்தை எடுத்துக் கூறி இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும்படி அழைப்பு விடுக்க அனுப்பி வைத்தார்கள். அலீ (ரலி) அவர்கள் அனுப்பி வைக்கப்படுவதற்கு 6 மாதங்களுக்கு முன்னர் தான் காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் எமனுக்கு சென்றிருந்தார்கள், எனினும் குறைந்த அளவே அவர்களின் பயணத்திற்கு வெற்றி கிடைத்தது.

அதன் பின் தான் அல்லாஹ்வின் சிங்கமான அலீ (ரலி) அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டார்கள். எமன் தேசத்து மக்கள் அலி (ரலி) அவர்களை எதிர்கொண்டு வரவேற்றார்கள். அலீ (ரலி) அவர்கள் அன்றைய காலைத் தொழுகையை தானே முன்னின்று நடத்தினார்கள். அதன் பின் இஸ்லாத்தைப் பற்றி விரிவானதொரு விளக்கம் அளித்தார்கள். அதனால் கவரப்பட்ட அந்த ஹம்தான் பகுதி மக்கள் அனைவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். பின் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இறுதி ஹஜ்ஜில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அலீ (ரலி) அவர்கள் எமன் பிரதேசத்தை விட்டு, மக்காவிற்கு கிளம்பினார்கள். அதுபோது, எமன் தேசம் முழுவதும் இஸ்லாத்தை ஏற்றிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிஜ்ரி 9 ஆம் ஆண்டு, ஜகாத் என்ற ஏழை வரியை இறைவன் அனைத்து வசதி வாய்ப்புள்ள முஸ்லிம்கள் மீது கடமையாக்கி வைத்த பின், அதனை வசூலிப்பதற்காக நிர்வாக அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, அதன் நிர்வாகிகள் நாடு முழுவதும் ஜகாத் பணத்தை வசூல் செய்து வந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறப்பதற்கு முன்பாகவே எமனைப் பல மாவட்டங்களாகப் பிரித்து, ஒவ்வொன்றிற்கும் ஒரு பொறுப்புதாரியும் நியமிக்கப்பட்டார். முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களை இஸ்லாத்தின் பிரச்சாரகராக அனுப்பி வைக்கப்பட்டார்கள். இந்த நேரத்தில் தான் சன்ஆ வில் அஸ்வத் அன்ஸி என்பவன் தானும் இறைத்தூதர் தான் என்று தன்னைத் தானே பிரகடனப்படுத்திக் கொண்டான். இவனது ஆரம்ப காலப் பிரச்சாரம் வெகு வேகமான நடைபெற்றது. பனீ அஸத் மற்றும் துலைஹா ஆகிய குலத்தவர்கள் தங்களது குலத்தைச் சேர்ந்த ஒருவனை, தங்களுக்குரிய இறைத்தூதராகப் பிரகடனப்படுத்திக் கொண்டார்கள். மூன்றாவதாக முஸைலமா என்ற பொய்த்தூதன் தோன்றினான். அஸ்வத் அன்ஸி யின் வளர்ச்சி இவனுக்கு ஊக்கத்தைக் கொடுத்தது. இவன் தன்னைப் பொய்த்தூதனாகப் பிரகடனப்படுத்திக் கொண்டதோடல்லாமல், இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு ஒரு மடலையும் அனுப்பி வைத்தான். அதில் :

இறைவனின் தூதனான முஸைலமா, இறைவனின் தூதரான முஹம்மதிற்கு எழுதும் மடல். உங்களது இறைத்தூதுத்துவத்தில் ஒரு பங்காளியாக நான் நியமனம் செய்யப்பட்டுள்ளேன். இந்த உலகின் பாதி நம்மைச் சேர்ந்தது, மீதிப் பங்கு குறைஷிகளுக்கு உரியது. ஆனால் இதில் அதிக உரித்துடையவர்கள் குறைஷிகளே என்றும் அதில் குறிப்பிட்டிருந்தான்.

இதற்கு பதிலளிக்கும் முகமாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பதில் கடிதம் ஒன்றை முஸைலாமா என்ற பொய்யனுக்கு அனுப்பி வைத்தார்கள். அதில் :

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றேன். அல்லாஹ்வின் தூதரான முஹம்மதுவிடமிருந்து பொய்யனான முஸைலமாவுக்கு.., இறைவனைப் போற்றிப் புகழ்ந்ததன் பின், நேர்வழியைப் பின்பற்றுகின்ற அனைவர் மீதும் சாந்தி உண்டாகட்டுமாக..! சந்தேகமில்லாமல், இந்த உலகமும் அதில் உள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது. இதில் அவன் தான் விரும்பியவர்களுக்கு அதிலிருந்து தன்னுடைய அடிமைகளுக்கு வழங்கி இருக்கின்றான். இறையச்சமுடையவர்களுக்கே இறுதி வெற்றி உள்ளது.

இந்தப் பொய்யனுக்கு அறவுரைகள் மூலமும், படிப்பினைகள் மூலமும் அவனுடைய பொய் வாதத்தை முறியடிக்க இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முயற்சிகளை மேற்கொண்டார்கள். ஆனால் இதனால் எந்தப் பயனும் விளயைவில்லை. முஸைலமாவோ தனது படைகளைத் திரட்டிக் கொண்டு முஸ்லிம்களை அச்சுறுத்தவும், முஸ்லிம்களின் மீது போர் தொடுக்கவும் புறப்பட்டு விட்டான். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையிலும், முஸைலமாவினுடைய நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து வருமாறு தன்னுடைய பிரதிநிதிகளுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

அஸ்வத் அன்ஸி என்பவனை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உயிருடன் வாழ்ந்து கொண்டிருந்த காலத்திலேயே வெட்டிக் கொல்லப்பட்டு விட்டான்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்ததன் பின்பு, இந்தப் பொய்த்தூதர்களின் பிரச்சார வேகம் கடுமையாகியது. எமன் முழுவதும் கலவரச் சூழல் பரவியது. எமனில் இறைத்தூதர் (ஸல்) அவர்களால் நியமிக்கப்பட்ட பொறுப்புதாரிகள் தூக்கி எறியப்பட்டு, அந்த இடத்திற்கு கலவரக்காரர்கள் வந்தமர்ந்தார்கள். இன்னும் மதீனாவையும் இந்தப் பிரச்னை விட்டு வைக்கவில்லை. மதீனாவில் வாழ்ந்த குறைஷிகள் மற்றும் பனூ தக்கீஃப் குலத்தவர்களைத் தவிர மற்ற குலத்தவர்கள் முழுமையாகவோ அல்லது ஒரு பகுதியினரோ இந்த பொய்த் தூதர்களால் கவரப்பட்டு, இஸ்லாத்தை விட்டும் வெளியேறக் கூடிய சூழ்நிலையில் இருந்தனர். இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்ட உலக ஆசையால் வார்க்கப்பட்ட மனிதர்கள் பலர், தங்களை இறைவனது தூதர்கள் எனப் பிரகடனப்படுத்திக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். இன்னும் ஒவ்வொரு குலத்தவர்களும் தங்களது குலத்தவர்களிலிருந்து தூதர்கள் எனப் பிரகடனப்படுத்திக் கொண்டவர்களுக்கு வலுச் சேர்க்க ஆரம்பித்தார்கள். அவர்களை ஆதரித்தும் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

அமிர் பின் துஃபைல் என்பவர், பனூ ஆமிர் குலத்தைச் சேர்ந்தவர் வெளிப்படையாகவே இவ்வாறு கூற ஆரம்பித்தார். நான் அரேபியா முழுவதற்கும் தலைவராக ஆக விரும்புகின்றேன். எனவே, குறைஷிகளைப் பின்பற்ற வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை என்று அறிவித்தார்.

பனூ அஸத் கோத்திரத்தாரின் நண்பர்களான கதஃபான் கோத்திரத்தார்கள், நாங்கள் ஏன் குறைஷிக் குலத்தில் உதித்த ஒருவரை இறைத்தூதராக ஏற்றுக் கொள்ள வேண்டும், எங்களது நண்பர்கள் இருக்க நாங்கள் ஏன் குறைஷிக் குலத்து இறைத்தூதருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? என்று கூற ஆரம்பித்தார்கள். இன்னும் குறைஷிகளின் இறைத்தூதர் இறந்து விட்டார், பனீ அஸத் ன் இறைத்தூதர் உயிருடன் உள்ளார் என்று இறுமாப்புடன் கூறினார்கள்.

பல நூற்றாண்டுகளாக எமன் தேசத்தை அரசாண்டு வந்த ஹிமையரைட்ஸ் குலத்தவர்களின் இறுதி மன்னரான நுஃமான் பின் முன்திர் ன் பேரனான அப்துல் கைஸ் என்பவனும் தன்னை இறைத்தூதராகப் பிகடனப்படுத்திக் கொண்டான்.

ஆண்கள் தான் என்றில்லை, பெண்கள் கூட தாங்களும் இறைத்தூதர்கள் தான் எனப் பிரகடனப்படுத்தும் செயல்களும் நடைபெற்றன. சஜா என்ற எமன் தேசத்துப் பெண்மணி தன்னைப் பொய்த்தூதராகப் பிரகடனப்படுத்திக் கொள்ள, கிறிஸ்தவக் குலமான பனூ தக்லீப் கோத்திரத்தார்கள், இந்த பெண் பொய்த்தூதரை ஆதரிக்க ஆரம்பித்தார்கள். இன்னும் பொய்த்தூதர்கள் தங்களுக்குள்ளே, ஒருவர் மற்றவரது தூதுத்துவத்தை பொய் என பிரஸ்தாபிக்க ஆரம்பித்தார்கள்.

துலைஹா என்பவன் தொழுகையிலிருந்து சஜ்தா வை நீக்கி விட்டான், மதுபானம் அருந்துவதும், விபச்சாரமும் தடை செய்யப்பட்டதல்ல என்று முஸைலமா அறிவித்ததோடு, பெண் தூதராக அறிவித்துக் கொண்ட சஜா வைத் திருமணம் செய்து கொண்டதோடு, ஐந்து வேளைத் தொழுகையை மூன்று வேளையாக மாற்றினான். நீக்கப்பட்ட காலை மற்றும் இரவுத் தொழுகையானது, சஜாவின் திருமணக் கொடைகளாகவும் என்றும் அறிவித்தான். இவ்வாறாக விதவிதமான அறிவிப்புகள் வெளிவரத் துவங்கின.

இதில் குறிப்பிட்டத்தக்கதும் நாம் கவனிக்கத் தக்கதும் என்னவென்றால், யார் யாரெல்லாம் இஸ்லாத்தின் ஆரம்பக் கட்டத்தில் இஸ்லாத்தைத் தழுவினார்களோ, அவர்கள் அனைவரும் உறுதியாக இருந்த அதே வேளையில், சமீக காலத்தில் இஸ்லாத்தை; தழுவியோர்கள் தான் இவ்வாறான பொய்ப்பிரச்சாரத்திற்கு பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களது எண்ணிக்கை அதிகமாக இருந்த காரணத்தால், மிக எளிதாக அவர்களால் குழப்பத்தை உண்டு பண்ண முடிந்தது. துலைஹா என்பவன் மட்டும், அவனது பிரச்சாரத்தின் காரணமாக மட்டும் பனூ தாய் மற்றும் அஸத் குலத்தவர்களையே ஒன்று திரட்டி வைத்திருந்தான்.

அபுபக்கர் (ரலி) அவர்கள் கலீபா பொறுப்பேற்றுக் கொண்டவுடன், இந்த விவகாரத்தின் தாக்கத்தை உணர ஆரம்பித்து, இதனை முறியடிக்க திட்டம் வகுத்தார்கள்.

0 comments:

Post a Comment