Monday, April 16, 2012

வரலாறுகளை எப்படி ஆய்வு செய்வது- பகுதி 01

இன்று மக்களுக்கு மத்தியில் காணப்படுகின்ற மிக முக்கியமான பிரச்சினைதான் வரலாறுகளை எப்படி வாசிப்பது, எப்படி சரியான வரலாறுகள் என்று அடையாளம் கண்டு கொள்வது என்பதுதான். இன்று எத்தனையோ உலமாக்கள் வரலாறுகள் எனும் பெயரில் கப்சாக்களை சொல்லி வருகின்றார்கள். அதனை பாமர மக்கள் சரிகானுகின்றார்கள். இதில் வேடிக்கை என்ன வென்றால, உலமாக்கள் சொல்கின்ற வரலாறுகள் அவர்களுக்கே நாம் சொல்லும் வரலாறு சரியானதுதானா என்று சந்தேகம் எற்படுகின்றது.

யார் சொல்கின்ற வரலாறு சரியானது? எப்படி வரலாறுகளை அறிந்து கொள்வது? என்கின்ற சந்தேகங்கள் ஏற்படலாம்.

எனவே இங்கு நாம் வரலாறுகளை எப்படி வாசிப்பது, எப்படி சரியான வரலாறுகளை கண்டுகொள்வது என்பன சம்மந்தமாக பார்போம்.

இஸ்லாமிய வரலாற்றில் அதன் பொர்காலமாக வர்ணிக்கப்படுவது அப்பாசியர்களின் ஆட்சிக்காலமான இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டுகளாகும். இதில் இன்றலவும் போற்றுகின்ற பல கலைகள் நூலுருப்படுத்தப்பட்டன.
அக் கலைகளில் இஸ்லாமிய வரலாறுகளும் நூலுருப்படுத்தப்பட்டன. ஆனால் இக்காலத்தில் வரலாற்றை எழுதியவர்கள் மூன்று வகையினராகக் காணப்பட்டார்கள்.

01) தன்னுடைய எழுத்தின் மூலம் சாப்பிடுவதையும், கௌரவம் தேடுவதையும் இலட்சியமாகக் கொண்டவர்கள். :

இவர்கள் எல்லாக் காலத்திலும் இருப்பதைப் போல அந்தக்காலத்திலும் இருந்தார்கள். அப்பாசியரின் காலத்தில் இவர்கள் இருந்ததால் அப்பாசியர்களிடம் புகழையும் பணத்தையும் எதிர்பார்த்து அப்பாசியர்களுக்கு முன்னால் ஆட்சிவெய்த உமையாக்களை ஏசியும்; அவர்களை மக்கள் தவறாக புரிந்து கொள்ளும் அடிப்படையில் அவர்களின் வரலாறுகளை சித்தரித்தும், அப்பாசியர்களைப் புகழ்ந்தும், அவர்களின் சேவைகளை பாராட்டியும் வரலாறுகளை திரிவுபடுத்தி எழுதினார்கள்.

02) ஹவாரிஜ், ஷீஆ(ரவாபிழா) போன்ற குழுக்கள்.

ஹவாரிஜ்களைப் பொறுத்தவரைக்கும் இவர்கள் அலி (ரலி) அவர்கள் போன்ற பெரும் ஸஹாபாக்களை காபிர்கள் என்று அவர்களின் வரலாற்றில் அவர்களை காபிர்கள் என்று சொல்வதற்கு எவையெல்லாம் தங்களுக்கு துணை செய்யும் என்று அவர்கள் நினைத்தார்களோ அதனை மாத்திரம் எடுத்து தங்கள் நூல்களில் பதிவு செய்தும் பிரச்சாரம் செய்தும், அலி(ரலி) அவர்கள் இறை சட்டங்களுக்கு பதிலாக மனித சட்டங்களை ஏற்று இறைவனை நிராகரித்தார்கள் என்று எழுதியும் வந்தார்கள்.
அலி(ரலி) அவர்களின் வரலாற்றை வாசிப்பவர்களும் கேட்பவர்களும் அவரை காபிர் (இறைவன் எம்மை பாதுகாக்க வேண்டும்) என்று புரிந்து கொள்ளுமளவுக்கு அவரின் வரலாற்றை திரிவுபடுத்தி எழுதினார்கள்.

ஷீஆக்களைப் பொறுத்தமட்டில் ஹவாரிஜ்களுக்கு முற்றிலும் எதிரானவர்கள். அலி(ரலி) அவர்களை நபியின் அந்தஸ்திலும் சில போது இறைவனின் அந்தஸ்திலும் வைத்து நேக்குபவர்கள். ஏனைய ஸஹாபாக்களை கொச்சைப்டுத்துவதையும் இஸ்லாமிய வட்டதிலிருந்து வெளியேற்றுவதையும் தங்கள் இலட்சியமாகக் கொண்டவர்கள்.

இவர்கள் தங்கள் கொள்கையை உண்மைப்படுத்துகின்ற அடிப்படையில், ஸஹாபாக்களுக்கு மத்தியில் நடந்த சில நிகழ்வுகளுக்கு தவறான விளக்கம் கொடுப்பது, தங்கள் கொள்கையை உறுதிப்படுத்துவதற்காக வரலாறுகளை புனைதல், வரலாற்றில் எந்த ஆதாரமும் இல்லாத கற்பனைக் கதைகளை உருவாக்குதல் போன்ற வழிகள் மூலம் வரலாற்றைப் பதிவு செய்தனர்.

அதாவது, எது உண்மையான வரலாறு, எது தவறான வரலாறு என்பதற்கு பதிலாக வரலாற்றை வாசிப்பவர்கள் ஸஹாபாக்களை தவறானவர்கள் என்றும், அலி(ரலி) அவர்கள் போன்ற சில ஸஹாபாக்களே உண்மையான முஸ்லீம்கள் என்றும் முடிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இருப்பது, இல்லாதது அனைத்தும் சேர்த்து எழுதப்பட்டது.

03) இமாம் தபரி, இப்னு கதீர், இப்னு அதீர், இப்னு அஸாகிர், தஹபி, இப்னு ஹிஸாம் (ரஹிமஹ{ முள்ளாஹ்) போன்ற நடுநிலைவாத எழுத்தாளர்கள்.

இவர்கள், வரலாற்றில் ஏற்படுத்தப்பட்டுள்ள தவறான செயற்பாடுகளையும், அதனால் மக்களிடம் ஏற்படுட்டுள்ள மாற்றங்களையும் தப்பான முடிவுகளையும் பார்கின்றார்கள். இதனால் மக்களுக்கு சரியான வரலாறுகளை தெளிவுபடுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் வரலாற்றை அறிவிப்பாளர்கள் வரிசையுடன் பதிவு செய்தனர். நாம் அறிவிப்பாளர் வரிசையுடன் வரலாறுகளை பதிவு செய்வதே சரியானது என்பதை தெளிவுபடுத்துவதற்கு போதுமானது என்று அவர்கள் கருதினர். இதற்கு மேலாக சிலபோது அறிவிப்பாளர்களில் உள்ள சில விமர்சனங்களையும் முரண்பாடுகளையும் அவ்வப்போது சுட்டிக்காட்டவும் செய்தனர்.
எனவே, இவர்களின் நூல்களில் பலமான அறிவிப்பாளர்கள் தொடரைக்கொண்ட செய்திகளும், பலவீனமான அறிவிப்பாளர்கள் தொடரைக்கொண்ட செய்திகளும் காணப்பட்டன. பிற்பட்ட காலங்களில் வரலாற்றை படித்தவர்கள் அறிவிப்பாளர் வரிசைக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு பதிலாக செய்திகளுக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுத்து இந்த இமாம்களின் நூல்களில் இந்த செய்தி பதிவாகியுள்ளது என்று நம்பி ஏமாந்து போனதோடு மற்றவர்களை வேண்டுமென்றோ, தெரியாமலோ ஏமாற்றியும் விட்டனர். (அள்ளாஹ் எம்மைப் பாதுகாப்பானாக).

வரலாற்றை எவ்வாறு வாசிப்பது?

வரலாறு என்பது மனிதர்களுக்கு மிகவும் விருப்பமான ஒரு துறை. நாம் இப்படிச்செய்ய வேண்டும் இவ்வாறுதான் இருக்கவேண்டும் எனும் ஏவல்களை விட, இவ்வாறுதான் இருந்தார்கள் இப்படித்தான் நடந்தது என்று சொல்வதை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். வரலாறுகளை சுருக்கமாக கேட்டு இரகசிப்பதே மக்களின் இயல்பாக காணப்படுகின்றது. இதனால் பேச்சாலர்களும் எழுத்தாளர்களும் மக்களின் இரசனையைக் கருத்தில் கொண்டு திடுக்கிடச் செய்யும் வரலாறுகளையும், ஆச்சரியமான அபூர்வமான சம்பவங்களையும் சேர்த்துக் கொள்வதில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றார்கள். இது உண்மையான வரலாறா? அல்லது தவறானதா? என்பதை அவர்கள் சிந்திக்க மறந்து விடுகின்றார்கள். மக்கள் இரகசிப்பதை மட்டுமே இலக்காக கொண்டு செயற்படுகின்றார்கள்.

சில போது இவர்கள் இமாம் இப்னு கதீர் (ரஹ்) அவர்கள் இதை அறிவிப்புச் செய்துள்ளார்கள் என்று சொல்கின்றார்கள். இப்னு கதீரைப் பார்த்தால் அவரே அந்த அறிவிப்பு பலவீமானது என்று சொல்லி இருப்பார். சில போது இவர்கள் தங்கள் இடத்திற்கு ஏற்றால் போல் புதிய வரலாறுகளை பழைய பெயர்களில் புனைகின்றார்கள். இது, குறித்த பேச்சாளர் அல்லது நூலாசிரியரின் இலட்சியத்திற்கு ஏற்ப மாறுபடுகின்றது. நல்ல உணர்வுகளையும் சிறந்த முடிவுகளையும் அவர் விரும்பினால் அதற்கு ஏற்றாற்போலும், தவறான முடிவுகளையும் தீய உணர்வுகளையும் உருவாக்கவோ அல்லது கட்டிக்காக்கவோ விரும்பினால் அதற்கு உகந்ததாகவும் தான் கொண்டுவரும் துணுக்கை வடிவமைக்கிறார்.

இன்று எத்தனையோ வாசகர்களைப் பொறுத்தவரைக்கும் எது முதலில் அவர்களின் கரங்களில் கிடைக்கிறதோ அதை வேதவாக்காக நினைத்துவிடுகின்றார்கள். அதை சரியானதா? தவறானதா? என்று ஆய்வு செய்வதற்கு பதிலாக அதையே அடிப்படையாகக் கொண்டு மற்றயதை உரசிப்பாக்கின்றார்கள்.

இதனால் சரியான வரலாறுகளை நிராகரித்து, இட்டுக்கட்டப்பட்ட வரலாறுகளை சரியானதாக மற்றவர்களுக்கு பிரச்சாரம் செய்கின்றார்கள்.

எனவே நபி(ஸல்) அவர்களின் ஹதீஸ்களில் சரியானவற்றை தெரிந்துகொள்வதற்கு நாம் எத்தகைய வழிகளைப் பின்பற்றுகிறோமோ அத்தகைய வழிகளை சரியான வரலாறுகளைத் தெரிந்துகொள்வதற்கும் நாம் பின்பற்றவேண்டும். இதுவே இன்றைய காலத்தின் தேவையாகவுமுள்ளது. நபி(ஸல்) அவர்களின் ஹதீஸ்களில் ஏதாவது ஒன்றை நாம் கேள்விப்பட்டால், அது பலவீனமானதா? அல்லது பலமானது? என்று முதலிலே ஆய்வு செய்கின்றோம். அதன் பின்பே அதற்கு ஏற்றாற் போல் முடிவுகளை எடுக்கின்றோம்.

இஸ்லாமிய அறிஞ்சர்கள் ஒரு ஹதீஸைப் பலமானது என்று தீர்மானிப்பதற்கு குறித்த செய்தியின் அறிவிப்பாளர் வரிசையையும் அதன் உள்ளீட்டையும் (மதனை) அவதானிக்கின்றார்கள். அறிவிப்பாளர் வரிசையை நிதானமாகவும் அவதானமாகவும் ஆய்வு செய்கின்றார்கள். அந்த அறிவிப்பாளர் வரிசையில் விமர்சிக்கப்பட்டவர் அல்லது பலவீனமானவர் இடம் பெற்றுள்ளாரா? என்பதை தெறிந்து கொள்ள கடும் முயற்சி செய்கின்றார்கள். அறிவிப்பாளர் வரிசை சரியானது என்பதை தெறிந்து கொண்ட பின் அவர் சொல்லும் செய்தியை அவதானிக்கின்றார்கள். அதில் அறிவிப்பாளரால் உட்புகுத்தப்பட்ட விடயங்கள் உள்ளனவா? அல்லது அந்த செய்தியில் உள்ளதா? என்பதை அவதானிக்கின்றார்கள். இதன் போது பல நிபந்தனைகளையும் கடும் முயற்சிகளையும் செய்கின்றார்கள்.

இதன் பிறகு குறித்த செய்தியில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு விதமான ஆய்வுகளிலும் குறைகள் எதுவும் காணப்படவில்லையானால் அந்த செய்தி பலமானது என்று தீர்ப்பு வழங்குகின்றார்கள். அதில் வடுக்கள் காணப்படின் அத்தராதரத்துக்கு ஏற்ப பலவீனமானது, மிக்பபலவீனமானது அல்லது இட்டுக்கட்டப்பட்டது என்றும் தீர்ப்பு வழங்குகின்றார்கள்.

(குறிப்பு : ஹதீஸ்களை எப்படி ஆய்வு செய்வது என்று அடுத்த ஆய்வில் பார்வையிடலாம்)

வரலாற்றைப்பொறுத்தவரைக்கும் இந்த விதிகளைப் பயன்படுத்துவது மிகவும் கடினமானது. என்றாலும் நாம் அதை பயன்படுத்தாமல் இருக்கவும் முடியாது. இந்த விதிகளை நாம் பயன்படுத்தினால், அதிகமான வரலாறுகளை இளந்து விடுவோம் என்று சிலர் விமர்சனம் செய்கின்றார்கள். இது தவறான விமர்சனமாகும். இவர்கள் கற்பனை செய்வதைப்போன்று அதிகமான வரலாறுகளை நாம் இழந்துவிடமாட்டோம்.

உண்மையில் நமக்குத் தேவையான வரலாறுகள் அனைத்தும் அறிவிப்பாளர்கள் வரிசையுடன் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இமாம் தபரி (ரஹ்) தன்னுடைய தாரீஹ் என்ற நூலிலே பதிவுசெய்துள்ளார்கள், அல்லது இமாம் புஹாரி, முஸ்னத் அஹ்மத், ஜாமிஉத்திர்மிதி போன்ற ஏறாளமான ஹதீஸ் நூல்களில் பதிவாகியுள்ளன. அல்லது இப்னு ஜரீர், இப்னு கதீர் போன்ற தப்ஸீர் கலை அறிஞ்சர்கள் சில வரலாற்று தகவல்களை அறிவிப்பாளர் வரிசையுடன் பதிவு செய்துள்ளார்கள். சில வரலாறுகள் குறித்து அறிவிப்பாளர் வரிசையுடன் தனியான நூல்கள் எழுதப்பட்டுள்ளன.

எனவே நாம் ஒரு போதும் நமத்கு இந்த வரலாறுகள் அறிவிப்பாளர் வரிசை இல்லாமல் இருக்காது. அவ்வாறு அறிவிப்பாளர்கள் வரிசைதான் இல்லாமல் இருந்தாலும் நம்மிடம் ஒரு அடிப்படை உள்ளது. அதுதான் ஸஹாபாக்கள், அவர்களை அள்ளாஹ் பொருந்திக் கொண்டதும் அல்லாது குர்ஆனில் புகழ்ந்தும் சொல்லியுள்ளான். எனவே அதன் அடிப்படையில் நின்று எங்களிடம் உள்ள செய்திகளை நாம் தரம் பிரித்துக் கொள்ள முடியும்.

யாரிடம் நாம் வரலாறுகளை வாசிப்பது என்பதனை அடுத்த தொடரில் பார்வையிடலாம்

1 comment:

  1. சுருக்கமாகச் சொலவதென்றால் அரேபிய வரலாறு ஏகப்பட்ட குழப்பங்களில் ஆழ்ந்துள்ளது. 1400 வருட சம்பவங்கள் கூட நம்பும்படி தொகுக்கப்படவில்லை.எனவேதான் எதற்கெடுத்தாலும் குழப்பமே மிஞ்சுகிறது.இவ்வளவு குழப்பமான வரலாற்றை குப்பைக்கு அனுப்பிவிட்டு நிம்மதியாக இருக்கலாமே ? காட்டரபிகளின் வாழ்க்கை வரலாற்றில் என்ன இருக்கும் ? வன்முறைான் மிச்சம். முகம்மது வாளைத்தூக்கினார். இன்றளவும் வாளுக்கு - ஏகே-47 - ஒய்வு இல்லை. பயங்கரவாத இயக்கங்கள் அரேபிய மத சமூகத்தின் மிக முக்கியமான அடையாளம்.

    ReplyDelete