Thursday, March 22, 2012

முதல் கலீஃபா அபுபக்கர் (ரலி) வாழ்க்கை வரலாறு part-14

பனீ தயீ

காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் இந்த பனீ தயீ என்ற குலத்தை எதிர்ப்பதற்காக அனுப்பி வைக்கப்டடார்கள், இந்தக் குலத்தவர்கள் துலைஹா என்ற பொய்யனுக்கு ஆதரவளித்து வந்தார்கள். காலித் பின் வலீத் (ரலி) அவர்களை அனுப்பி வைக்கப்படுவதற்கு முன்பதாக, அதி பின் காதிம் (ரலி) அவர்களை அபுபக்கர் (ரலி) அவர்கள் இந்தக் கோத்திரத்தவர்களிடம் அனுப்பி வைத்தார்கள்.


முஸ்லிம்களின் அனைத்துத் தயாரிப்புப் பற்றியும் அவர்களிடம் விளக்கிக் கூறுவது, அதன் மூலம் ஏற்படக் கூடிய பாரதூரமான விளைவுகள் குறித்து எச்சரிக்கை செய்வது, ஆகியவையே அதீ பின் காதிம் (ரலி) அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியாக இருந்தது.

இப்பொழுது, இஸ்லாத்தின் தூதை ஏந்திக் கொண்டு அதீ (ரலி) அவர்கள் பனீ தயீ குலத்தவர்களை நோக்கிச் சென்றார்கள்.

பனீ தயீ குலத்தவர்களே..!

முஸ்லிம்களிடம் மோதுவது குறித்து நீங்கள் சற்றுச் சிந்திக்க வேண்டும், அவ்வாறு நீங்கள் மோதுவதென்று முடிவெடுத்தால், அதை விடப் பாரதூரமான விளைவொன்றை நீங்கள் இனிச் சந்திக்கப் போவதுமில்லை என்று கூறினார்கள்.

அதீ (ரலி) அவர்களின் முதல் முயற்சி சற்றுத் தோல்வியைத் தழுவி இருந்தாலும், மீண்டும் மீண்டும் அவர் செய்த முயற்சி நல்ல பலனைத் தந்தது. இப்பொழுது, இஸ்லாத்தின் பால் தங்களை மீண்டும் இணைத்துக் கொள்ளச் சம்மதித்த அவர்கள்,

‘நாங்கள் இஸ்லாத்திற்குள் வந்து விட்டோம் என்பதை துலைஹா அறிந்து கொண்டால், எங்களையும் எங்களது மனைவி மக்களையும் தொந்தரவு செய்ய ஆரம்பித்து விடுவான். எனவே, எங்களது மனைவி மக்களை பாதுகாப்பாக அவனிடம் இருந்து மீட்டுக் கொள்வதற்கு சற்று எங்களுக்கு அவகாசம் அளிக்க வேண்டும்’ என்று அவர்கள் வேண்டிக் கொண்டார்கள்.

இவர்களது இந்த வேண்டுகோளை அதீ (ரலி) அவர்கள் தளபதி காலித் பின் வலீத் (ரலி) அவர்களிடம் தெரிவிக்கவே, அவரும் அதற்குச் சம்மதித்து மூன்று நாட்கள் அவகாசத்தை வழங்கி விடுகின்றார்கள். பனீ தயீ குலத்தவர்கள், வாக்களித்தது போல தங்களது குடும்பத்தவர்களைப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்றதன் பின்பு, தங்களை மீண்டும் இஸ்லாத்திற்குள் இணைத்துக் கொண்டார்கள். இரத்தம் எதுவும் சிந்தாமல், இப்பொழுது முஸ்லிம்கள் பனீ தயீ குலத்தவர்களுக்கு எதிரான போர் நடவடிக்கையில் வெற்றி பெற்றார்கள்.

இப்பொழுது, காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் தனது படையை பனீ ஜதீலா என்ற குலத்தை நோக்கித் திருப்பினார்கள். இப்பொழுது காலீத் பின் வலீத் (ரலி) அவர்களது படையில், ஆயிரம் பனீ தயீ குலத்தைச் சேர்ந்த குதிரை வீரர்கள் இடம் பெற்றிருந்தார்கள். படையெடுப்புக்கு முன்பு, இவர்களிடமும் பனீ தயீ குலத்தவர்களிடம் பேசிப் பார்த்தது போன்று பேசிப் பார்த்து விடுவது என்றும், ஒரு பறவையின் இரண்டு இறக்கைகள் போன்றவர்கள், பனீ தயீ குலத்தவர்களும், பனீ ஜதீலா குலத்தவர்களும் என்று காலித் பின் வலீத் (ரலி) அவர்களுக்கு விளக்கம் கொடுத்த அதீ (ரலி) அவர்கள், சமாதானத் தூது சென்றார்கள். பனீ தயீ யைப் போலவே, பனீ ஜதீலா குலத்தவர்களும் தங்களை இஸ்லாத்திற்குள் மீண்டும் இணைத்துக் கொண்டார்கள்.

துலைஹா என்ற பொய்யனுக்கு எதிராகத் துவக்கப்பட்ட இந்தப் போரில், அதீ பின் காதிம் (ரலி) அவர்களின் சாதுர்யத்தால், மிகப் பெரிய வெற்றியை காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் பெற்றார்கள். இந்த வெற்றியை அடுத்து, துலைஹா தனது இருப்பிடத்தை விட்டு விட்டு, சிரியாவை நோக்கி ஓடி விட்டான். பின் அங்கிருந்தபடி, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டார்.

ஒரு முறை துலைஹா மக்காவிற்கு ஹஜ் செய்யும் நிமித்தம் வந்த பொழுது, ஒருவர் அபுபக்கர் (ரலி) அவர்களிடம் துலைஹா வந்திருப்பதாகக் கூறிய பொழுது, இப்பொழுது துலைஹா ஒரு முஸ்லிம், அவரது நடவடிக்கை பற்றி எந்த வித கேள்வியும் கிடையாது’ என்று பதில் கூறி விட்டார்கள். உமர் (ரலி) அவர்களின் காலத்தில், உமர் (ரலி) அவர்களிடம் வந்து பைஅத் செய்து கொண்டார் துலைஹா அவர்கள்.

0 comments:

Post a Comment