Thursday, March 22, 2012

முதல் கலீஃபா அபுபக்கர் (ரலி) வாழ்க்கை வரலாறு part-03

தந்தையின் மனக்குமுறல்

அபுபக்கர் (ரலி) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் சென்று விட்டதை அறிந்த அவரது தந்தையாரான அபூ குஹஃபா அவர்கள் மிகவும் கவலையுற்றார்கள், விசனப்பட்டார்கள். தகவலறிந்தவுடன் நேராக தனது பேத்தியான அஸ்மா (ரலி) அவர்களிடம் வந்து, அஸ்மாவே..! உனது தந்தையார் மக்காவை விட்டு மதீனாவிற்குச் சென்று விட்டதாக அறிகின்றேன்..! இன்னும் இருந்த பணத்தையும் தன்னுடன் எடுத்து விட்டாரோ..? என்று வினவுகின்றார்.


இல்லை..! இல்லை..! நமக்காக எனது தந்தையார் ஓரளவு பணத்தை விட்டு விட்டுச் சென்றிருக்கின்றார்கள் என்று கூறிய அஸ்மா (ரலி) அவர்கள், அபூகுஹஃபாவை கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு, துணியினால் சுற்றப்பட்டதொரு மூட்டையில் சில ஓட்டுத் துண்டுகளை நிரப்பி வைத்து, கண் தெரியாத அவரின் கைகளை அதனுள் விட்டு, அவரே அதனை தொட்டுப் பார்த்து, திருப்பி அடைய வைக்கின்றார்கள்.

கண் தெரியாத அவர், அதனைப் பணம் என நம்பி, இந்தளவு பணத்தை அபுபக்கர் விட்டு விட்டுச் சென்றிருப்பதால், நமக்குக் கவலையில்லை என்று கூறுகின்றார்கள்.

அபுபக்கர் (ரலி) அவர்களது ஹிஜ்ரத்துக்குப் பின் அவரது வீட்டில் நடந்த கீழக்கண்ட சம்பவமும் முக்கியத்துவம் பெறுகின்றது.

அஸ்மா (ரலி) அவர்கள் வீட்டில் இருந்து கொண்டிருக்கின்றார்கள். அபுபக்கர் (ரலி) அவர்களும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் ஹிஜ்ரத் சென்று விட்டதை அறிந்து குறைஷித் தலைவர்கள் பலர் ஒன்று சேர்ந்து அபுபக்கர் (ரலி) அவர்களது வீட்டிற்கு வருகின்றார்கள். அவ்வாறு வந்தவர்களின் தலைவனாக வந்த அபுஜஹல், அபுபக்கர் (ரலி) அவர்களது வீட்டுக் கதவை பலம் கொண்ட மட்டும் தட்டுகின்றான்.

வெளியே வந்த அஸ்மா (ரலி) அவர்களிடம், எங்கே உனது தந்தையார்..? அபுஜஹல் ன் வாயிலிருந்து வார்த்தைகள் நெருப்பாய் விழுந்தன.

அவரைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.. இது அஸ்மா (ரலி) அவர்களது பதில்..!

என்ன உனக்குத் தெரியாதா? என்று கோபாவேசப்பட்ட அபுஜஹல், அஸ்மா (ரலி) அவர்களின் கன்னத்தில் ஓங்கி அறைய.., அஸ்மா(ரலி) அவர்களின் காதில் போட்டிருந்த தோடு கழன்று சுவரில் பட்டுத் தெரித்து விழுந்தது.

ரபியுல் அவ்வல் மாதம் 12 ம் நாள், இறைத்தூதர் (ஸல்) அவர்களும், அபுபக்கர் (ரலி) அவர்களும் மிகவும் பத்திரமாக மதீனா நகரை வந்தடைந்தார்கள்.

தூரத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்களும், அபுபக்கர் (ரலி) அவர்களும் வந்து கொண்டிருப்பதைக் கண்ட மதீனத்து மக்களுக்கு வருவதில் யார் இறைத்தூதராக இருக்கும் என்று கேள்வி துளைத்தெடுத்துக் கொண்டிருந்தது. அவர்களது சந்தேகம் வலுக்க வலுக்க அவர்களது இதயத் துடிப்பு உச்சத்துக்குச் செல்கின்றது.

இப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்களது முகத்தில் பட்ட வெயிலை மறைப்பதற்காக, அபுபக்கர் (ரலி) அவர்கள், தனது துண்டை எடுத்து இறைத்தூதர் (ஸல்) அவர்களது முகத்திற்கு குடையாகப் பிடிக்கின்றார்கள். இப்பொழுது தான் அந்த மதீனத்து மக்களுக்கு சந்தேகம் தீர்ந்தது. ஆகா..! குடை பிடிப்பவர் அவரது தோழர்..! குடைக்குள் இருப்பவர் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்ற முடிவுக்கு வந்த பின் தான் அவர்களது நாடித் துடிப்பும் சற்று இறங்க ஆரம்பித்தது.

மதீனாவை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அடைந்ததும், முதல் பணியாக மதீனத்து அன்ஸார்களையும், மக்கத்து முஹாஜிர்களையும் ஒன்றிணைத்து சகோதரத்து பந்தத்தை உருவாக்கினார்கள். அந்த அடிப்படையில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ஃகாரிஜா பின் ஸைத் (ரலி) அவர்களை அபுபக்கர் (ரலி) அவர்களது தோழராக இணைத்து வைத்தார்கள்.

இப்பொழுது தனது இல்லத்திற்கு தனது சகோதரராக அபுபக்கர் (ரலி) அவர்களை ஃகாரிஜா பின் ஸைத் (ரலி) அழைத்துச் செல்கின்றார்கள். தனது சொத்துக்களையும், தனது உடமைகளையும் சுட்டிக் காட்டிய ஃகாரிஜா (ரலி) அவர்கள், சகோதரரே..! இந்த சொத்துக்களில் சரி பாதியை எடுத்துக் கொள்ளுங்கள். இன்னும் எனக்கு இரண்டு மனைவிகள் உண்டு. நீங்கள் விரும்பும் மனைவியை நான் விவாகரத்துச் செய்து தருகின்றேன். நீங்கள் மணமுடித்துக் கொள்ளுங்கள் என்று சற்றுப் பேச்சை நிறுத்தினார்.

அனைத்தையும் நிதானமாகக் கேட்டுக் கொண்டிருந்த அபுபக்கர் (ரலி) அவர்கள், சகோதரரே..! உங்களது பெருந்தன்மைக்கு மிக்க நன்றிகள் பல..! இதில் எது ஒன்றும் எனக்குத் தேவையில்லை என்று பதில் கூறினார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களது குடும்பம்

மதீனாவிற்குச் சென்றதிலிருந்து ஏழு மாதங்கள், அபு அய்யூப் அல் அன்ஸாரி (ரலி) அவர்களது இல்லத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தங்கி இருந்தார்கள். பின்பு மதீனத்து நபவி பள்ளியைக் கட்டுவதற்கான இடத்தைத் தேர்வு செய்து, அபுபக்கர் (ரலி) அவர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு, அந்த இடத்தில் பள்ளியையும் கட்டினார்கள். அதனைச் சுற்றிலும் வீடுகளைக் கட்டிக் கொள்ள இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அனுமதித்தார்கள். அபுபக்கர் (ரலி) அவர்கள் ஜன்னல் கதவு பள்ளியை நோக்கி இருப்பது போல ஒரு வீட்டையும் கட்டிக் கொண்டார்கள். பள்ளிவாசல் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருக்கும் பொழுது, சிலரை மக்காவிற்கு அனுப்பி தனது குடும்பத்தவர்களை அழைத்து வரும்படி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பணித்தார்கள்.

இப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்களுடைய குடும்பத்தவர்களுடன், அபுபக்கர் (ரலி) அவர்களது குடும்பத்தவர்களும் இணைந்து மதீனாவிற்கு வந்து, பழைய வீட்டில் அதாவது சுன்ஹ் என்ற இடத்தில் தங்கினார்கள்.

குறிப்பு :

ஹிஜரத் மற்றும் அதில் அபுபக்கர் (ரலி) அவர்களின் பங்கு குறித்து விரிவாக அறிந்து கொள்ள ஹிஜ்ரத் என்ற நூலைப் பார்வையிடுக!!

இத்துடன் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் அபுபக்கர் (ரலி) அவர்களுடைய ஹிஜ்ரத் பயண வரலாறு முடிவுக்கு வந்தாலும், இதிலிருந்து தான் அபுபக்கர் (ரலி) அவர்களின் கிலாபத் - அதாவது இஸ்லாமிய உம்மத்தின் முதல் கலீபா ஆட்சிப் பிரதிநிதியாகப் பரிணமாம் அடைகின்றார்கள். அதற்கான தகுதிகளும், அனுபவங்களும் இதிலிருந்து தான் ஆரம்பமாகின்றன என்பதை வரலாறு அறிந்தவர்கள் கூறும் உண்மையாகும். மேலும், அபுபக்கர் (ரலி) அவர்களது வாழ்க்கையை நாம் மேலும் ஆய்வு செய்வதென்றால், அது இறைத்தூதர் (ஸல்) அவர்களுடைய வாழ்க்கையோடு, அவர்களது வரலாற்றோடு பிண்ணிப் பிணைந்து வரக் கூடியதாக இருக்கும். அதிலும் இத்துடன் உமர் (ரலி) அவர்களது வாழ்க்கையும், பிணைந்தே செல்லும்.

எனவே, சுருக்கம் கருதியும், இன்னும் அபுபக்கர் (ரலி) அவர்களது வாழ்க்கையை அதிகம் சுருக்கி விடாமலும், அவர்களது வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்களை கீழக்காணும் தலைப்புகளின் கீழ் இன்ஷா அல்லாஹ் நாம் பார்க்க இருக்கின்றோம்.

• பத்ர் யுத்தம் ஹிஜ்ரி 2 ஆம் ஆண்டு

• உஹது யுத்தம், ரமளான் 3

• அகழ் யுத்தம்

• ஹ{தைபிய்யா உடன்படிக்கை, துல்காயிதா 6

• கைபர் யுத்தம், முஹர்ரம் 7

• மக்கா வெற்றி, ரமளான் 8

• ஹ{னைன் யுத்தம்

• தபூக் யுத்தம், ரஜப் 9

• ஹிராக்ளியஸ்

• ஹஜ் - தலைமைப் பொறுப்பு வகித்தல்

• இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மரணம் (12, ரபியுல் அவ்வல் 11)

இத்துடன் அபுபக்கர் (ரலி) அவர்களின் ஆரம்ப வாழ்க்கை முடிவுற, அதனை அடுத்து இரண்டாவது பாகமாக கலீபா அபுபக்கர் (ரலி) அவர்களின் வாழ்வு மலரும் இன்ஷா அல்லாஹ்.

0 comments:

Post a Comment